Tuesday, June 14, 2011

2000ஆண்டுக்கு முந்தைய சமணர் படுக்கைகள் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே மலைமீது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுக்கைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் சமணம் குறித்து ஆய்வு செய்து வரும் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரபாகரன். பூர்ணசந்திர ஜீவா கீழ்க்கொடுங்காலூர் ஆரிசன் ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு வடக்கே 23 கி.மீ. தொலைவில் உள்ள மரக்கோணம் கிராமத்தில் உள்ள வள்ளி மலை மீது கடந்தசில நாட்களாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில். மலையின் தெற்கு பகுதியில் 75 மீற்றர் உயரத்தில் இயற்கையான குகையில் சமண படுக்கைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது. இங்குள்ள படுக்கைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் சமணத் துறவிகளின் உறைவிடமாக இருந்துள்ளன. இக்குகைத்தளம் 50 மீற்றர் நீளத்திற்கு கிழக்கு மேற்காக உள்ளது. குகையின் கிழக்கில், மேற்கில் இருந்து கிழக்காக மூன்று இடங்களில் 250 செ.மீ. நீளமும், 170 செ.மீ. அகலமும் கொண்ட பெரிய படுக்கை அமைப்புகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் ஆறு அல்லது ஏழுதுறவிகள் பயன்படுத்தி இருக்கலாம் என கருத முடிகிறது.

மேலும், குகையின் மூன்று இடங்களில் ஒவ்வொரு தனி படுக்கையும் மற்றொரு இடத்தில் இரண்டு படுக்கைகள் என மொத்தம் 24 படுக்கைகள் இருப்பதை அறிய முடிகிறது. இங்கே மண் மூடியுள்ள பகுதியை ஆய்வு செய்தால் மேலும் படுக்கைகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. குகையின் உள்ளே நான்கு இடங்களில் ஒரு மீற்றர் உயரமுள்ள பலகை கற்களை கொண்டு முட்டுக் கொடுத்துள்ளனர். குகையின் முன் 203 செ.மீ. நீளமும் 105 செ.மீ. அகலமும் 20செ.மீ. தடிமனும் உள்ள பலகை கல்லை மூன்று சதுரமான கற்களைக் கொண்டு முட்டு கொடுத்து கட்டில் போல் அமைத்துள்ளனர்.

குகை தளத்திற்கு முன் செடிகள் அடர்ந்த பகுதியில் 14க்கு 14செ.மீ. அளவில் உள்ள சதுரமான செங்கற்கள் காணப்படுகின்றன. எனவே இங்கு கட்டடம் இருந்து சிதைந்திருப்பது தெரிகிறது. குகை தளத்தின் மேல் பகுதியில் வடமேற்கில் வற்றாத சுனை ஒன்றும் காணப்படுகிறது. இதன் அருகே கிராம மக்கள் வள்ளியம்மாள் தெய்வ வழிபாடு நடத்துகின்றனர். இந்த கிராமத்தில் சிதைந்து காணப்படும் பல்லவர் கால ஜெயின் கோவிலுக்கு தெற்கே 52செ.மீ. உயரமும், 30செ.மீ. அகலமும் உள்ள ஜைன தீர்த்தங்கரர் சிற்பமும் காணப்படுகிறது. இங்கே மேலும் சிற்பங்கள் பூமியில் புதைந்திருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அகழ்வாய்வு செய்தால் மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கும் இவ்வாறு அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

http://www.thinakaran.lk/2011/05/19/default.asp?fn=f1105193&p=1


நன்றி தினகரன் மே 18, 2011

No comments: