Sunday, May 31, 2015

நேர்மையின் இமயம் !!!


தோழர் ப.ஜீவானந்தம் ...



பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. 
அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ் என்று கேட்டார்". என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..? " என்று ஆதங்கப்பட்டார் காமராஜர். உடனே ஜீவா, "நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.

 "நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர். "காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று ஜீவா மறுக்க, "அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார். "அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார். "கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர். விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா. "என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார். 

உடனே ஜீவா, "நல்ல வேட்டி  ண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே"... என்றார். உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர். விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின்
வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது.அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார். "ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவர், "ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில்
அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார். 

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது.
முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் " என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார்
காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது. காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. நோய்  வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..." காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"... என்பது தான்.

இனி எங்கே கான்பது இது போன்ற தலைவர்களை அடித்தட்டு மக்களோடு மக்களாக
வறுமையை உனர்ந்த,பகிர்ந்த தலைவர்கள்,கர்மவீரர், ஜீவா,கக்கன் போன்ற தலைவர்கள்.


கண்கள் ஊற்றும் நீரை தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா....

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா!!!


இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். 

கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.
நேற்று வெளிவந்த தீர்ப்பு (மே 11 2015 அன்று ஜெயலலிதா சொத்துக் குவிப்பு ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு ) என்னை மிகவும் பாதித்தது. பெண் என்று பாவப்படும் நண்பர்களே அவர் முதல்வராக இருந்த காலத்தில் செய்த குற்றம் அது. முதல்வர் என்பவர் மக்களைக் காப்பாற்றுபவர்.தவறே செய்யக்கூடாது. நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கனும். இங்கு நிதி நீதியை கொன்று புதைத்துவிட்டது.அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ’

ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு
100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து 
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது 
முதல்வர் காமராசர் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று 
அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. 
நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்ணே. வந்து பக்கதில உட்காருங்க என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...
ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. 
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. 
நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது.

‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, ழை மக்களுக்காகவே இருந்தார்....

இனி இதுபோல முதல்வர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தோடு...